Saturday, January 25, 2014

"மீண்டும் ஒரு பசு அரசியல்" ஜெயமோகனின் “புறப்பாடு” விமர்சனம் : Jayamohan Purapadu critics





“புறப்பாடு” கட்டுரையில் நாம் ஏன் பசும் பால் குடிக்கக் கூடாதுன்னா பசு குப்பை மற்றும் மலம் சாப்பிடுகிறது என்கிறார் ஜெயமோகன். அவருக்கு மிருகங்களை பற்றி போதுமான புரிதல் இல்லை என்பதைத் தான் இது காட்டுகிறது. பொதுவாக நாய் கூட மலம் சாப்பிடும். அதற்கு பசி என்று அர்த்தம் இல்லை. மிருகங்களுக்கு மூத்திரம் மலம் எல்லாம் அசிங்கம் அல்ல.


 மூத்திரம் மூலமாக தான் காதல் தூதே விடும். என் வீட்டு நாய் பூனை மூத்திரத்தை தினமும் நக்கும். அதன் பொருளே வேறு. அது என்னுடைய மலத்தை கூட வாய்ப்பு கிடைத்தால் விரும்பி சாப்பிடும். அதற்கு பசி ஒன்றும் இல்லை. ஆனால் மலத்தில் அப்படி ஒரு ருசி போல.

இது மிருகங்கள் வழக்கமாக செய்கிற ஒன்று தான். பெரும்பாலும் மலத்தில் உள்ள சத்துக்களை அடையவே சாப்பிடுகின்றன. இதை cacrophagia என்கிறார்கள். காண்டாமிருக, யானைக் குட்டிகள் பிறந்ததும் தாயின் மலத்தை உண்ணும். அதன் மூலம் தான் தம் குடலுக்கு ஜீரணுத்துக்கான நுண்ணுயிர்களை பெறும். இது போல் டயரியாவுக்கு பிறகு மனிதர்களுக்கு மலத்தை குழாய் வழி செலுத்தி நல்ல பேக்டீரியாக்களை அனுப்பும் ஒரு மருத்துவ முறை உள்ளது. ஒரு காலத்தில் மருத்துவர்கள் மலத்தை தொட்டு நக்கி தான் நோயை அறிவார்களாம். இப்படி மலம் மீதான அருவருப்பு கலாச்சாரரீதியானது தான். மிருகங்களுக்கு அதெல்லாம் இல்லை.
மலைவாழ் இனத்தை சேர்ந்த பழங்குடி மாணவர்கள் விடுதியில் பாலே பயன்படுத்துவது இல்லை; ஏனென்றால் அம்மக்களுக்கு எருமை தெய்வம். சரி, அப்படி என்றால் எருமைப்பால் தானே குடிக்கக் கூடாது. பசும்பாலுக்கு என்ன சிக்கல்? இப்படி ஒரு வைதிக மனோபாவத்துக்கு கீழ்த்தட்டு வக்காலத்து வாங்க முயன்று சொதப்பவும் செய்கிறார்.
குப்பை அழுகின உணவு மலம் சாப்பிடும் பசு என்பதால் ஜெமோ ஒரு கட்டத்தில் பால் சாப்பிடுவதை நிறுத்துகிறாராம். சரி, இதே லாஜிக்படி வயலில் சாணி உரம் போடுகிறார்கள். சிலர் மனித மலத்தை வைத்து பயிரிட்டு மிக அதிகமாக விளைச்சல் கிடைக்கும் என தமிழ்நாட்டில் சமீபத்தில் நிரூபித்திருக்கிறார்கள். இப்படி விளைச்சலான காய்கறி, தானியங்களை இவர் சாப்பிட மாட்டாரா? என்ன சாப்பிட்டாலும் உள்ளே போய் பாலாக தானே வெளிவருகிறது.
மாட்டின் பால் மட்டும் அல்ல பொதுவாக நான் பயன்படுத்தும் எல்லா பொருட்கள் பின்னாலும் ஒரு வதையும் ஒடுக்குமுறையும் மறைமுகமாக இருக்கத் தான் செய்கிறது. அதனால் அவற்றை பயன்படுத்தாமல் இருக்கிறோமா? உங்கள் பிள்ளை படிக்கிற பள்ளிக்கூடத்தில் வாத்தியாருக்கு சம்பளம் மிக குறைவென்று பள்ளியில் இருந்து நீக்கி விடுவீர்களா? எல்லா பிரச்சனைகளையும் ஒன்றாக்கி பார்த்தால் வாழ முடியாது.

இந்த “புறப்பாடு” தொடர் ஏன் சிலருக்கு பிடித்திருக்கிறது என புரிகிறது. வர வர ஜெயமோகன் மசாலா பட திரைக்கதை பாணியில் தான் கட்டுரை கூட எழுதுகிறார். இப்பதிவில் பசு கடைசியில் தற்கொலை கூட பண்ணுகிறது. இந்த பசுவை ஹீரோயினாக்கி ஒரு பாதிரியாரை அதன் மீட்பராக்கி ஒரு படம் கூட எடுக்கலாம். பசு தன் செத்துப் போன பாப்பாவை பத்தி பாட்டு கூட பாடலாம். எவ்வளவோ பண்ணலாம். தமிழ் சினிமா இதையும் தாங்கும்.

BY ABILASH CHANDRAN
http://thiruttusavi.blogspot.in/2013/08/blog-post_26.html

No comments: