Wednesday, August 20, 2014

no smokeing


புகைபிடிக்க  தடைசெய்யப்பட்ட பகுதி.
இங்கு புகைப்பிடித்தல்
தண்டனைக்குரிய குற்றம்.

மறைமலை நகர்  நகராட்சி

Saturday, August 9, 2014

திரு கிரிதரன் நவரத்தினம் அவர்களுடன் "வாழ்த்து" என்ற சொல் பற்றி ஒரு விவாதம் I : Discussion about Greet with V.N.Giritharan Editor in Chief Online Tamil Magazine since 2000 Part II

திரு கிரிதரன் நவரத்தினம் [V.N.Giritharan Editor in Chief Pathivukal.Com Online Tamil Magazine since 2000] அவர்களுடன் "வாழ்த்து" என்ற சொல் பற்றி ஒரு விவாதம் II :


செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி :  கிரிதரன் நவரத்தினம் ஐயா ,

நன்நூல் உரிச்சொல்லாக கூறும் "தொழுதல்" என்ற சொல்லும்[நன்நூல் 453] பெயராக ,வினையாக,உரியாக ஒரே நோக்கத்தில், கருத்திலேயே எல்லா இடங்களிலும் வருவதால் அதனை உரிச்சொல்லாகக் கருதமுடியாது என்று கூற உங்களால் முடியுமா ? தொழு என்று வினையாக, தொழுகை என்று பெயராக, தொழுதல் என்று உரியாக தானே அது வந்து நிற்கின்றது. இப்போது வாழ்த்தல் என்ற உரிச்சொல்லை தொழுதல் என்ற உரிச்சொல்லுக்கு பதில் அவ்விடத்தில் பொருத்தி பாருங்கள். அப்போது நமக்குள் ஒரு தெளிவு கிடைக்கும்! உடம்பொடு கூடிய உயிரினுடைய தொழில் குணமாகிய தொழுதல் என்ற உரிச்சொல் தொழுகைகள் என்று பன்மையில் பயன் படுத்தாத போது அதே தன்மை,குணம்,பண்பு உள்ள வாழ்த்தல் என்ற சொல் மட்டும் எப்படி பன்மையில் வந்து நிற்கும் ?????

செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி :   

வணக்கம் கிரிதரன் நவரத்தினம் ஐயா ,

[1] என் முதல் கேள்வி யாது எனில் நன்நூல் 453 கூறும் உரிசசொல்லுக்கான இலக்கண விதியை மறுக்கின்றிர்களா ?

[2]நன்நூல் தமிழ் இலக்கண படி தானே நாம் இந்த விவாதத்தை தொடர்கின்றேம் ?

[3]நன்நூல் 453 விதி யாது எனில் "துய்த்தல் துஞ்சல் தொழுதல் அணிதல் உய்த்தல் ஆதி உடல் உயிர்த் தொழில் குணம்" என்பது தானே ?

எமக்கு உங்கள் விடை கிடைக்குமா ? தொழுதல் என்ற உயிர்த் தொழில் குண உரிச் சொல்லுக்கான இலகிய உதாரணத்தை விரைவில் அளிக்கின்றேன்.

கிரிதரன் நவரத்தினம் :  
உரிச்சொல் என்பது உலகத்திலுள்ள உயிர் மற்றும் உயிரல்லாத பொருட்களின் இருவகைப்பண்பினை (குணப்பண்பு, தொழிற்பண்பு) உணர்த்தும் சொல். தொழுதல் என்பது உயிர்களின் தொழிற்பண்புகளிலொன்று. இவ்விதமான பண்புகளை உணர்த்தும் சொல்தான் உரிச்சொல். இவ்விதம்தான் நான் விளங்கி வைத்திருக்கின்றேன்.

செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி :   தொழுதல் என்னும் சொல் உரிச்சொல்லாக வரும் எளிய உதாரணங்கள் :

[1] தொழு உரம்

[2]தொழு நோய்

[3]தொழு நோயாளர்கள்


செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி :  //உரிச்சொல் என்பது உலகத்திலுள்ள உயிர் மற்றும் உயிரல்லாத பொருட்களின் இருவகைப்பண்பினை (குணப்பண்பு, தொழிற்பண்பு) உணர்த்தும் சொல். தொழுதல் என்பது உயிர்களின் தொழிற்பண்புகளிலொன்று. இவ்விதமான பண்புகளை உணர்த்தும் சொல்தான் உரிச்சொல். இவ்விதம்தான் நான் விளங்கி வைத்திருக்கின்றேன்.//

அப்படி எனில் தொழுதல் என்ற சொல் உரிச்சொல் தானே ? இதில் என்ன குழப்பம் ஐயா ?
தொழுதல் என்னும் சொல் உரிச்சொல்லாக வரும் எளிய உதாரணங்கள் :[1] தொழுத கையுள்ளும்

828. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.

[2]தொழு உயிர்
260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

கிரிதரன் நவரத்தினம் : உங்களது உதாரணத்தின்படி தொழுதல் உரிச்சொல் அல்ல, ஆனால் தொழு என்னும் சொல்லினை உரிச்சொல்லாகக் கொள்ளலாம். தொழு என்னும் சொல் உங்களது உதாரணத்தின்படி பல் குணத்தை உணர்த்துமொரு சொல்லாக வருகிறது. தொழு உரம், தொழுநோய் இவையெல்லாம் அண்மைக்காலத்துக் கலைச்சொற்களென்று நினைக்கின்றேன். தொழுவம் என்பது கூடப் பழந்தமிழ்ச்சொல்லா என்பது ஐயமே. தொழுவத்துக்குப் பதிலாக மன்றம் என்றே முன்பு அழைக்கப்பட்டதாக எங்கோ வாசித்திருக்கின்றேன். தொழு நோய் என்பது கூட தோல் நோய் என்பதன் திரிபோ என்று எண்ணியதுண்டு. தொழு உரம் என்று அழைக்கப்படும் காரணம் ஏன் என்பது தெரியுமா? இதுபோல் வாழ்த்து என்பதற்கும் உதாரணங்களைக் கூறுங்கள் பார்ப்போம். தொழுத கையுள்ளும் என்னும் சொற்றொடரில் வரும் தொழுத உரிச்சொல்லா என்பதில் எனக்குச் சந்தேகமே.

செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி :   கிரிதரன் நவரத்தினம் ஐயா , என் உதாரணங்கள் படி தொழுதல் உரிச்சொல் அல்ல என்று நீங்கள் கூறிவிட்டு அதன் பின் தொழுதல் என்ற சொல் உரிச்சொல் தான் என்ற முடிவுக்கு தாங்கள் வந்தது எப்படி ? நன்நூல் 453 கூறும் உரிசசொல்லுக்கான இலக்கண விதி "தொழுதல்" உரிச்சொல்லாக இருப்பதால் தானே ?

திருக்குறளில் வரும் தொழு உயிர், தொழுத கை இரண்டிலுமே தொழுதல் என்ற சொல் உரிச்சொல்லாக தான் வந்து உள்ளது.

 செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி : "தொழு மனமே" இதில் தொழு உரிச்சொல் தானே ஐயா ?

ஐங்கரனை மனம் உருக தொழு மனமே உன் ஐம்புலனும் ஐங்கரன் பாதத்தில் வைத்திடவே நீர் கேட்பதெல்லாம் நினைப்பதெல்லாம் அருளிடுவான் சாந்தை ஊர் சித்தி விநாயகனே.

 செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி : கிரிதரன் நவரத்தினம் ஐயா , "வையகந் தொழு கருக்குடி"----->இதில் தொழு உரிச்சொல் தானே ?

திருஞானசம்பந்தர் திருக்கருக்குடித்தலத்து இறைவன்[சிவன்] மேல் பாடியருளிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

நனவிலுங் கனவிலும் நாளுந் தன்னொளி
நினைவிலும் எனக்குவந் தெய்தும் நின்மலன்
கனைகடல் வையகந் தொழு கருக்குடி
அனலெரி யாடுமெம் மடிகள் காண்மினே.

 செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி :
 [1] வழுத்து என்ற சொல் வாழ்த்து என்று மருவி நிற்பதை தாங்கள் அறிவிர்கள்.[வாழ்த்து என்னும் சொல் மக்களை வாழ்வித்தலும் இறைவனைப் போற்றுதலும் ஆகிய இருபொருள் தந்து மயங்கற்கிடனாக நிற்றலால், வழுத்து என்னும் சொல்லை அதனின்று திரித்தனர் முன்னை யறிஞர்.]

[2]திருத்தொண்டர்புராணம் பாடல் 934 ல்

"ஆயர் குலத்தை விளக்கிட வந்துத யஞ்செய்தார்;
தூய சுடர்த்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார்;
வாயினின் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப்பாலிற்
பேயுட னாடு பிரானடி யல்லது பேணாதார்.
ஆயர் குலத்தை விளக்கிட வந்துத யஞ்செய்தார்;
தூய சுடர்த்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார்;
வாயினின் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப்பாலிற்
பேயுட னாடு பிரானடி யல்லது பேணாதார். "

வரும் "வழுத்து மனத்தின்" என்பதை காண்க. இங்கு வழுத்து என்ற சொல் உரியாக தானே வந்து உள்ளது ?

 செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி :  வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை அழுத்தினன் ...இராவணன் வதைப் படலம் - யுத்த காண்டம்-கம்பராமாயணம்

செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி : வாய்ந்து வழுத்த வருவோனே! வழுத்த எதுவும் தருவோனே!----ஆரியூர் பத்மனாப ராமாநுஜ தாஸர் என்பவரால் எழுதப்பட்டது.

செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி :
வழுத்து நெறியா வதும்என்று
நின்ற ஆயன் தனைநோக்கி
நிரைமேய்ப் பொழிக நீயென்பார். -- சண்டேசுர நாயனார் புராணம்

செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி :
 மனம் அது நினைய வாக்கு
வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையில் கொண்டங்(கு) --  சிவஞானசித்தியார்

விவாதம் தொடரும்  .......


அன்புடன்,
கி.செந்தில்குமரன்

Wednesday, August 6, 2014

திரு கிரிதரன் நவரத்தினம் அவர்களுடன் "வாழ்த்து" என்ற சொல் பற்றி ஒரு விவாதம் I : Discussion about Greet with V.N.Giritharan Editor in Chief Online Tamil Magazine since 2000

திரு கிரிதரன் நவரத்தினம் [V.N.Giritharan Editor in Chief Online Tamil Magazine since 2000] அவர்களுடன் "வாழ்த்து" என்ற சொல் பற்றி ஒரு விவாதம் I : 

கிரிதரன் நவரத்தினம் : பொதுவாகக் க், த், ட், ப், ற் போன்ற எழுத்துகளைத் தொடர்ந்து வரும் உகர எழுத்தைத் தொடர்ந்து ஒற்றெழுத்து வராது. உதாரணமாக வாத்து / வாத்துகள், நாக்கு / நாக்குகள், கணக்கு / கணக்குகள் போன்றவற்றைக் கூறலாம். தோப்புகள் என்னும் சொல்லின் பன்மை: தோப்புகள். தோப்புக்கள் என்பது தோப்பிலிருந்து பெறப்பட்ட கள் என்னும் அர்த்தத்தைத் தரும். அந்த வகையில் வாழ்த்து என்னும் சொல்லின் பன்மையாக வாழ்த்துகள் என்பதே வரும். ஆயினும் இன்று பலர் வாழ்த்துக்கள் என்றே எழுதி வருகின்றனர். இதுவரை காலத்தில் எத்தனையோ சொற்கள் வழுக்களுடன் (பாவனையிலிருந்த காரணத்தால்) தமிழ் இலக்கணத்துள் உள்வாங்கப்பட்டு விட்டன. அதுபோல் வாழ்த்துக்கள் போன்ற சொற்களைப் பலர் அதிகமாகப் பாவிப்பதால் , தமிழ் இலக்கணத்துள் உள்வாங்கப்படும் சாத்தியங்களுள என்றே நினைக்கின்றேன்.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : திரு Giritharan Navaratnam ,வாழ்த்துக்கு பன்மையில் கள்/க்கள் என்ற விகுதி ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் "வாழ்த்து" என்ற வினை/பெயர்/உரி சொல்லுக்கு பன்மை விகுதி வாரா என்று தானே நானுன், திரு செந்தில் நாராயணனும் ஆய்ந்து முடிவுக்கு வந்து உள்ளோம்.இது பற்றி உங்கள் நிலை என்ன ஐயா ?"வினை, பெயராகி, உரியாகும்[ வினையடை,பெயரடை] போது பன்மை வாரா" என்று கொள்ளுதல் சரி தானே ஐயா ?

கிரிதரன் நவரத்தினம் : "வாழ்த்து" என்ற வினை/பெயர் உரிசொல்லுக்கு பன்மை விகுதி" என்று கூறுகின்றீர்கள். வாழ்த்து என்பதை ஏன் உரிச்சொல் என்னும் முடிவுக்கு வருகின்றீர்கள். உரிச்சொல்லின் வரைவிலக்கணத்தின்படி உரிச்சொல் பெயர், வினையடைகளாக வந்து , பண்பினை உணர்த்தும் , பெரிதும் செய்யுளுக்கு உரிய சொல் அல்லவா? ஆனால், வாழ்த்து என்பது பெயர் மற்றும் வினையடைகளாக வரும் அதே சமயம் வினைச்சொல்லாகவும் அல்லவா (வாழ்த்தினேன், வாழ்த்தினார் என்று) வருகின்றது. உரிச்சொல் வினைச்சொல்லாக வருவதாக அதன் இலக்கணம் கூறவில்லையே. மேலும் உரிச்சொற்கள் ஒரு குணம் தழுவிய, பல குணம் தழுவிய என இரு வகையான பிரிவுகளை உடையவை. அவ்வாறாயின் வாழ்த்து என்பதை எவ்விதம் இப்பிரிவுக்குள் அடக்கலாமென்று நினைக்கின்றீர்கள்? உதாரணமாக சால, உறு, தவ, நனி, கூர், கழி ஆகிய சொற்கள் மிகுதி என்னும் பண்பினைத்தரும் சொற்கள். இவ்விதம் வாழ்த்து என்பதை எவ்விதம் ஒப்பிடலாமென்று நினைக்கின்றீர்கள்?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : உரிச்சொல் வினைச்சொல்லாகாது எனினும், வினைச்சொல்லில் இருந்து தருவிக்கப்பட்ட வினையடை மற்றும் பெயரடை "வாழ்த்து" என்பது உரிச்சொல் தானே ? வினையடை மற்றும் பெயரடையாக வரும் சொல்லும் தானே உரிச்சொல் என்பது ? தாங்களும் "வாழ்த்துப்பா" என்னும்போது வாழ்த்து என்பது பெயரடையாக வருகிறது என்று அறிவுறுத்தி உள்ளிர்களே ! நானும் "திருவள்ளுவர் திருக்குறள் முதல் அதிகாரத்தில் கடவுள் வாழுத்து பாடினார்" என்ற வாக்கியத்தில் "வாழ்த்து: வினையடையாக தானே வருகின்றது என்று கூறி மெய்ப்பித்து உள்ளேனே ! "வினை, பெயராகி, உரியாகும்[ வினையடை,பெயரடை] போது பன்மை வாரா" என்று கொள்ளுதல் சரி தானே ஐயா ?

கிரிதரன் நவரத்தினம் : ஒரு சொல் வினையடையாக அல்லது பெயரடையாக வருவதால் மட்டும் உரிச்சொல்லாவதில்லை. உரிச்சொல் என்பது பல்வேறு பண்புகளையும் உணர்த்தும் பெயர். அச்சொல் ஒரு பண்பினை உணர்த்தலாம். அல்லது அந்தச்சொல் பல பண்புகளை உணர்த்தலாம். இவ்விதமாக அச்சொல்லானது பெயர் மற்றும் வினைச்சொற்களோடு சேர்ந்து பண்பினை உணர்த்தினால்தான் அச்சொல் உரிச்சொல். மேலும் உரிச்சொல் செய்யுளுக்கு உரிய சொல். வாழ்த்து என்னும் சொல்லினைப் பார்த்தால் இச்சொல் உரிச்சொல்லுக்குரிய பண்பினைக் கொண்டிருக்கின்றதா என்பதைப் பார்க்க வேண்டும். இச்சொல் ஒரு பண்பினை அல்லது பல பண்புகளை உணர்த்துகின்றதா என்று பார்க்க வேண்டும். செய்யுளுக்கு உரிய சொல்லாகவும் வருகின்றதா என்றும் பார்க்க வேண்டும். இவ்விதம் உரிச்சொல்லுக்கு உரிய சகல இலக்கணத்தகுதிகளையும் பார்க்கும்போது வாழ்த்து என்னும் சொல் உரிச்சொல்லுக்குரிய தகுதியினைப் பெறவில்லையென்றே நான் கருதுகின்றேன். இது என் கருத்து. இது பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : வினையடை,பெயரடை சொற்கள் உரிச்சொல் இல்லையா ? வினையடை,பெயரடை சொற்கள் உரிச்சொல் தானே ? வாழ்த்து என்ற சொல்லை நாம் இருவருமே வினையடை,பெயரடை சொல்லாக ஏற்கும் போது ,அவ் வினையடை,பெயரடை சொல் உரிச்சொல் இல்லையா ஐயா ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : வாழ்த்துதல் என்பதும் மனித பண்பு தானே ஐயா ? வழுத்தல் ,பரவு,பழிச்சு ஆகிய சொற்கள் உரிசொலாக வந்து வாழ்த்து என்ற சொல்லை தானே குறிகின்றது ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : பெயருரிச்சொல் தானே பெயரடை என்றும் வினையுரிச்சொல் தானே வினையடையாகவும் கருதப்படுகின்றது ஐயா ? நான் தவறாக கருத்தில் கொண்டு உள்ளேனா ஐயா ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :
நன்னூல்-உரியியல் 453:
"துய்த்தல் துஞ்சல் தொழுதல் அணிதல்
உய்த்தல் ஆதி உடல் உயிர்த் தொழில் குணம்"
நன்றி பவணந்தி முனிவர்
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை :
துய்த்தல் ........ உய்த்தல் = துய்த்தல் ,துஞ்சல் ,தொழுதல் ,அணிதல் ,உய்த்தல் என்னும் ஐந்தும் , ஆதி = இவை போல்வன பிறவும் , உடல் உயிர்த் தொழிற்குணம் = உடம்பொடு கூடிய உயிரினுடைய தொழில் குணங்களாம் .
அப்படி எனில் "வாழ்த்துதல்" என்ற சொல்லும் உடம்பொடு கூடிய உயிரினுடைய தொழில் குணம் தானே ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :
நன்னூல்-உரியியல் : 459
முழக்கு இரட்டு ஒலிகலி இசைதுவை பிளிறு இரை
இரக்கு அழுங்கு இயம்பல் இமிழ்குளிறு அதிர்குரை
கனைசிலை சும்மை கௌவை கம்பலை
அரவம் ஆர்ப்போடு இன்னன ஓசை
விளக்கம் : இவ்விருபத்திரண்டும் இவைபோல்வன பிறவும் ஒலித்தற்றொழிற்பண்பின்கண் வரும்
அப்படி எனில் "வாழ்த்துதல்" என்ற சொல்லும் ஒலித்தற்றொழிற்பண்பின்கண் தானே ?

கிரிதரன் நவரத்தினம் : செந்தில்குமரன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வாழ்த்துகள் / வாழ்த்துக்கள் பற்றிக் குறிப்பிடும்போது "எனவே உரிச்சொல்லாக[வினையுரிச்சொல்] இருக்கும் "வாழ்த்து" என்ற சொல் பண்பினை குறிக்கும் போது அது "கள்" அல்லது "க்கள்" என்ற பன்மை விகுதி பெற்று வருமா எனற கேள்வியும் எழுகின்றது. வாழ்த்துகள் ,வாழ்த்துக்கள் இரண்டும் தவறு தானே ? .... வாழ்த்து என்ற வினைச்சொல் ,முதல்நிலைத் தொழிலாகுபெயராகி , வினையடை, பெயரைடை யாகவும் காட்சி அளிப்பதால்..... "வினை, பெயராகி, உரியாகும்[ வினையடை,பெயரடை] போது பன்மை வாரா" என்று கொள்ளுதல் சரி தானே " என்று கேட்டிருக்கின்றார். இதற்கான பதிலை திரு. செந்தில் நாராயணன் மாதர் பற்றிக் கூறும் விளக்கத்தில் அறிந்துகொள்ள முடியும். அதிலவர் 'மாதர் என்னும் சொல் இயல்பான நிலையில் பெண்கள் என்னும் அர்த்தத்தைத் தரும்போது உரிச்சொல்லாகக் கருதப்படுவதில்லை' என்றும், 'காதல் என்னும் அர்த்தத்தில் செய்யுளில் வரும்போதுதான் உரிச்சொல்லாகக் கருதப்படும்' என்கின்றார். ஒரு சொல் உரிச்சொல்லாக வரும் போது அதற்குப் பன்மை வாரா. உதாரணமாக மாதர் என்பது காதல் என்னும் அர்த்தத்தில் வரும்போது பன்மை வராது. ஆனால் மாதர் என்பது தன் இயல்பான பொருளில் வரும்போது அதற்குப் பன்மை வரலாம். உதாரணமாக மாதர் (மாதர் என்பதை மாது என்னும் ஒருமையின் மரியாதைக்குரிய சொல்லாகவும் கருதலாம்; பன்மையாகவும் கருதலாம். அவர் என்பதைப் போல்) என்பதன் பன்மையாக மாதர்கள் என்னும் பதம் பல இடங்களில் பாவிக்கப்பட்டுள்ளது. திருவாய் மொழியில் 'மாதர்கள் வாண்முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்' என்று வருவதைக் காணலாம். இதுபோல் வாழ்த்து என்பதைத் திரு செந்தில்குமரன் கருத்துப்படி உரிச்சொல்லாகக் கொண்டால் அதற்குப் பன்மை வராது. ஆனால் அதன் இயல்பான நிலையில் அது வாழ்த்து என்னும் பெயர்ச்சொல்லாகவும் வருகிறது. (கடவுள் வாழ்த்து, திருமண வாழ்த்து போன்றவற்றில்) அப்போது வாழ்த்துகள் என்று (மாதர்கள் என்று பயன்படுத்துவதுபோல்) பயன்படுத்தலாம்.
என்னைப்பொறுத்தவரையில் வாழ்த்து என்னும் சொல் உரிச்சொல்லாக வர வேண்டுமானால் இதற்குக் கடி என்னும் சொல்லுக்குள்ளதைப் போல் பல பண்புகளைக் குறிக்கும் கருத்துகள் அல்லது மிகுதி என்பதற்குப் பல உரிச்சொற்கள் வருவதைப்போல் வாழ்த்து என்னும் சொல்லும் பண்புணர்த்தும் சொல்லாக, செய்யுளுக்குரியதாக வரவேண்டும். வாழ்த்துவது மனிதரின் பண்பு. ஆனால் வாழ்த்து என்ற சொல் எந்தச் சொல்லின் பண்பினை உணர்த்தப் பாவிக்கப்படுகின்றது (ஏனைய உரிச்சொற்களைப் போல்). உரிச்சொல் என்றால்
"பல்வகைப் பண்பும் பகர்பெயர் ஆகி
ஒரு குணம் பலகுணம் தழுவிப் பெயர் வினை
ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்" என்றிருக்க வேண்டும். செய்யுட்கு உரியன என்று வருவதைக் கவனிக்கவும். வாழ்த்து அவ்விதம் வருவதில்லை. அதன் இயல்பான அர்த்தத்திலேயே எப்பொழுதுமுள்ளது. மாதர் காதலைக் குறிப்பிடும்போது உரிச்சொல்லாக வருவதைப்போல், வாழ்த்து என்பது வேறென்ன அர்த்தத்தில் வருமென்று செந்தில்குமரன் கருதுகின்றீர்கள்?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :
கிரிதரன் நவரத்தினம் ஐயா, நான் முன்பு நன்நூலை மேற்கோள் காட்டி கூறும் விடயங்கள் யாதுஎனில் ....................,
[1]நன்நூல் 453:
"துய்த்தல் துஞ்சல் தொழுதல் அணிதல்
உய்த்தல் ஆதி உடல் உயிர்த் தொழில் குணம்"
விளக்கம் :
துய்த்தல் ........ உய்த்தல் = துய்த்தல் ,துஞ்சல் ,தொழுதல் ,அணிதல் ,உய்த்தல் என்னும் ஐந்தும் , ஆதி = இவை போல்வன பிறவும் , உடல் உயிர்த் தொழிற்குணம் = உடம்பொடு கூடிய உயிரினுடைய தொழில் குணங்களாம் .
அப்படி எனில் "வாழ்த்துதல்" என்ற சொல்லும் உடம்பொடு கூடிய உயிரினுடைய தொழில் குணம் தானே ?
[2]நன்னூல் : 459
முழக்கு இரட்டு ஒலிகலி இசைதுவை பிளிறு இரை
இரக்கு அழுங்கு இயம்பல் இமிழ்குளிறு அதிர்குரை
கனைசிலை சும்மை கௌவை கம்பலை
அரவம் ஆர்ப்போடு இன்னன ஓசை
விளக்கம் : இவ்விருபத்திரண்டும் இவைபோல்வன பிறவும் ஒலித்தற்றொழிற்பண்பின்கண் வரும்
அப்படி எனில் "வாழ்த்துதல்" என்ற சொல்லும் ஒலித்தற்றொழிற்பண்பின்கண் தானே ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : "மாதர்" என்ற சொல் காதலை குறித்து உரிச்சொல்லாக நின்றாலும் ,இயல்பான பொருளில் பெண்களை குறித்து பெயர்ச்சொல்லாக நின்றாலும் அது வெவ்வேறு தேவைக்காக[ அர்த்தத்தில்] [காதல் என்று உரியாக, பெண்கள் என்று பெயராக] வருகிறது அல்லவா ? ஆனால் வாழ்த்து என்ற சொல் ஒரே நோக்கத்தில் தானே வினையாக,பெயராக, உரியாக பயன் படுகின்றது ? மேலும் நன்நூல் இலக்கணம் கூறுவது படி வாழ்த்து என்ற சொல்லும் உடம்பொடு கூடிய உயிரினுடைய தொழில் குணம் தானே ?[நன்நூல் 453] மேலும் நன்நூல் இலக்கணம் கூறுவது படி வாழ்த்து என்ற சொல்லும் ஒலித்தற்றொழிற்பண்பின்கண் தானே ? [நன்நூல் 459]
செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : நீங்கள் ஒரு விடயத்தை காண தவறுகின்றீர்கள். வாழ்த்து என்ற சொல் வினையாகவும், பெயராகவும் வந்து நன்நூல் கூறுவது படி உடம்பொடு கூடிய உயிரினுடைய தொழில் குணத்தை தானே பெற்று வருகின்றது ?மேலும் நன்நூல் கூறுவது படி அச்சொல் ஒலித்தற் தொழிற்பண்பினையும் அல்லவா பெற்று வருகின்றது? ஆனால் திருவாய் மொழியில் 'மாதர்கள்' என்ற பயன்பாடு பெயர்சொல்லாகதானே பயன்படுகின்றது ? பன்மை இங்கு தகுமே ! ஆனால் வாழ்த்து என்ற வினையீலும் , வாழ்த்து என்ற உரியீலும் பன்மை தகாத போது வாழ்த்து என்ற பெயரில் மட்டும் பன்மை தகுமோ ? மேலும் ஒருவர் உங்களுக்கு கூறும் "வாழ்த்து" என்பது எண்ணுவதற்கு [is it countable ?]ஏற்றதா ? இல்லையே ? அப்படி எனில் வாழ்த்துக்கள்[கள்] தவறு தானே ? முறுக்குகள் எண்ணபடலாம் . வாழ்த்துகளை எண்ண முடியுமா ஐயா ? ஒருவர் கூறும் "என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்ற வாக்கியத்தில் அவ் வாழ்த்துக்களை எண்ண முடியுமா ஐயா ? ஒருவர் ஒரு வாழ்த்து [வாழ்த்து செய்தி அல்லது வாழ்த்துரை] தானே என் பிறந்த நாளுக்கு கூற முடியும் ?

கிரிதரன் நவரத்தினம் : வாழ்த்து என்னும் சொல் ஒரே நோக்கத்தில், கருத்திலேயே எல்லா இடங்களிலும் வருவதால் அதனை உரிச்சொல்லாகக் கருதமுடியாதென்பதென் கருத்துகளிலொன்று. உரிச்சொற்களெல்லாம் செய்யுளில் இயல்பான பொருளற்ற இன்னுமொரு பொருளில் வருவதுதான் வழக்கம். அந்த வகையில் வாழ்த்து என்பது அவ்விதமான செய்யுளுக்கு மட்டுமுரிய சொல் அல்ல. துய்த்தல், துஞ்சல், தொழுதல், அணிதல் போல் வாழ்த்துதலைக் கருதமுடியாதென நினைக்கின்றேன். வாழ்த்துதல் என்பது மொழியைப் பாவித்து, எழுத்தைப் பாவித்து, சித்திரங்களைப் பாவித்து எல்லாம் உடலைப் பாவிக்காமல் கூட வாழ்த்தலாம் அல்லவா. ஆனால் துய்த்தல், துஞ்சுதல், தொழுதல், அணிதல் எல்லாம் உடலைப் பாவித்துச் செய்யப்பட வேண்டியவை. வாழ்த்துதல் மனிதரின் நாகரிகப் பண்பு. உடலின் பண்புகளிலொன்றல்ல. பண்புக்குப் பல அர்த்தங்களுள்ளன. பண்பாக நடந்து கொண்டான் என்பதற்கும் , ஒரு பொருளின் பண்பு என்பதற்கும் வேறுபாடுகளுள்ளன.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :
கிரிதரன் நவரத்தினம் ஐயா ,
[1] தெய்வத்தை தொழும்போது கடவுளை வாழ்த்தி மனம் ஒருமித்து பாடுதல் தகுமே ! எனவே தொழுதல் போன்றே வாழ்த்து என்ற சொல்லும் உடம்பொடு கூடிய உயிரினுடைய தொழில் குணம் தானே ? இஸ்லாமியர்கள் குரான் கொண்டு கடவுளை வாழ்த்தி தொழுவதும் , பிற மதத்தவர் தம் மறை நூல் கொண்டு கடவுளை வாழ்த்தி தொழுவதும் உடம்பொடு கூடிய உயிரினுடைய தொழில் குணம் தானே ?
[2]முழக்கு,அழுங்கு..... இவ்விருபத்திரண்டும் இவைபோல்வன பிறவும் ஒலித்தற்றொழிற்பண்பினைக்கொண்டு வினை ,பெயர் ,உரி சொற்க்களாக நின்று ஆனால் பன்மையில் வராத போது வாழ்த்து என்ற வினை ,பெயர் ,உரி சொல்லிலும் எப்படி ஐயா பன்மை வரும் ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :
கிரிதரன் நவரத்தினம் ஐயா ,
தொழுதல் என்ற உடம்பொடு கூடிய உயிரினுடைய தொழில் குண உரிச்சொல்லும் ,முழக்கு என்ற ஒலித்தற்றொழிற்பண்புச்சொல்லும் நன்னூல் இலக்கணபடி [453 மற்றும் 459] உரிச்சொல்லாக நின்றாலும் பயன்பாட்டில் வினையாகவும் வந்து தொழுதல் ,முழக்குதல் என்ற வினையினை குறிக்கும் போதும், இடியின் "முழக்கொடு" (குற்றாலக் குறவஞ்சி) என்றும், தொழுகை[ தொழுகைக்கான நேரம் 12 மணி]என்றும் பெயரினை குறிக்கும் போதும் அது பன்மையில் வாரா என்ற நிலையில் அது போன்ற "வாழ்த்து" என்ற உரிச்சொல்லும் பெயர்ச்சொல்லாக பயன்படும்போது பன்மையில் வராது என்பது நாம் நம் அறிவு மூலம் அடைய வேண்டிய முடிவு அல்லவா ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :
கிரிதரன் நவரத்தினம் ஐயா ,
“பறை” [சொல்]எனும் வினைச்சொல், பறையும் பொழுதும் மக்களை ஈர்ப்பதற்கு பயன்படுத்திய ஒலியெழுப்பிய கருவிக்கான பெயர் சொல்லாகவும் நிலைத்துவிட்டது. அதனை நன்னூல் இலக்கணம் 459 ,மற்றும் 458 விதிபடி உரிச்சொல்லாகவும் பயன்படுத்த முடியும். அது சமயம் “பறை” என்ற பெயர்ச்சொல்லுக்கு பன்மை விகுதி தகும் [பறைகள்]. இங்கு பன்மை வர காரணம் யாது எனில் பறை என்ற பெயர்ச்சொல் "உயிர் அல்" பொருளை சுட்டுவதால் அச் சொல் பன்மை பெறுவது இயல்பு தானே ? அதே சமயம் வாழ்த்து எனற சொல் பெயர் சொல்லாக பயன் படுத்த படும் போது அது "உயிர் பொருள் குணம் பண்பை" [உடல் உயிர்த் தொழில் குணம்] குறிப்பதால் அது பன்மை பெற்று வராது என்ற கருத்தை நான் நம் அறிவு கொண்டு பெறமுடியும் அல்லவா ?
குறிப்பு :
நன்னூல் இலக்கணம் 459 :
முழக்கு இரட்டு ஒலிகலி இசைதுவை பிளிறு இரை
இரக்கு அழுங்கு இயம்பல் இமிழ்குளிறு அதிர்குரை
கனைசிலை சும்மை கௌவை கம்பலை
அரவம் ஆர்ப்போடு இன்னன ஓசை
விளக்கம் : இவ்விருபத்திரண்டும் இவைபோல்வன பிறவும் ஒலித்தற்றொழிற்பண்பின்கண் வரும்

நன்னூல் இலக்கணம் 458 :
மாற்றம் நுவற்சி செப்பு உரை கரை நொடி இசை
கூற்றுப் புகறல் மொழிகிளவி "----விளம்பு அறை----"
பாட்டுப் பகர்ச்சி இயம்பல் சொல்லே

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :
கிரிதரன் நவரத்தினம் ஐயா ,
இறுதியாக ஆனால் உறுதியாக நான் கூற விரும்புவது யாது எனில் "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழு அல கால வகையின் ஆனே" [நன்னூல் இலக்கணம் 462] என்ற விதிப்படி நாம் வாழ்வை அமைத்துகொண்டாலும், நான் மதித்து போற்றும் எம் இரு தமிழ் அறிஞர்கள் திரு நன்னன்[வாழ்த்துகள்] மற்றும் திரு பெருமாள்முருகன்[வாழ்த்துக்கள்] என்று கூறி தம் இலக்கண கண்னை திறந்து தவறு இழைக்கும் போது எம்மால் அமைதிகாக்க எம் தமிழ் என்னை அனுமதிக்கவில்லை.


விவாதம்தொடரும்.......


அன்புடன்,
கி.செந்தில்குமரன்

Tuesday, August 5, 2014

"வாழ்த்து" என்ற சொல் பற்றி தமிழ்ப் பேராசிரியர் திரு செந்தில் நாராயணன் அவர்களுடன் ஒரு விவாதம் II Discussion about the word Greet II

தமிழ்ப் பேராசிரியர் திரு செந்தில் நாராயணன் அவர்களுடன் "வாழ்த்து" என்ற சொல் பற்றி ஒரு விவாதம் II

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : நம் விவாதங்களை தொகுப்பாக்குதல் உங்களுக்கு உடன்பாடு தானே ?

செந்தில் நாராயணன் : தொகுப்பாக்குவதில் எனக்கு எந்தவித மறுப்பும் இல்லை.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : ஒருவர் உங்களுக்கு கூறும் "வாழ்த்து" என்பது எண்ணுவதற்கு [is it countable ?]ஏற்றதா ? இல்லையே ? அப்படி எனில் வாழ்த்துக்கள்[கள்] தவறு தானே ? முறுக்குகள் எண்ணபடலாம் . வாழ்த்துகளை எண்ண முடியுமா ஐயா ?

செந்தில் நாராயணன் :1. அவர் தனக்கு வாழ்த்து சொன்ன பலரிலும் ஒருவரைத்தான் விரும்புகிறார். 2. அவர் தனக்கு வந்த வாழ்த்துக்கள் பலவற்றிலும் ஒன்றைத்தான் விரும்புகிறார். இரண்டாவது வாக்கியத்த்ல் உங்களுக்கு உடன்பாடு உள்ளதா?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : இரண்டு வாக்கியங்களும் சரி என்று தான் தோன்றுகிறது ஐயா ஆனால் ...," அவர் தனக்கு வந்த வாழ்த்துரைகள் பலவற்றிலும் ஒன்றைத்தான் விரும்புகிறார்" என்று கூறுவது மிக்க சரியாக இருக்குமோ என்று நினைக்கின்றேன்.

பலர் கூறும் போது வாழ்த்துக்கள் என்று கூறுவது சரியாயினும், ஒருவர் கூறும் "என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்ற வாக்கியத்தில் அவ் வாழ்த்துக்களை எண்ண முடியுமா ஐயா ?

ஒருவர் ஒரு வாழ்த்து [வாழ்த்து செய்தி அல்லது வாழ்த்துரை] தானே என் பிறந்த நாளுக்கு கூற முடியும் ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :கண் தெரியாதவருக்கு யானை எப்படி இருக்கும் என்று கண் தெரிந்தவர் விளக்குவது போல எனக்கு நீங்கள் விளக்குவது உள்ளதா ஐயா ?

செந்தில் நாராயணன் :
ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும்
கால்கூறு அல்லது பற்றலன் ஆகும்
அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால்
செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும்
மை அறு புலமை மாண்பு உடைத்து ஆகும்
- நன்னூல்
[பொருள் :மாணாக்கர்கள் எவ்வளவு கவனமாக ஆசிரியர் கூறுவதை, சித்திரப்பாவைபோல அமர்ந்து கேட்டாலும், கால் பகுதிதான் மனதில் பதியும். தன்னோடு பாடம் கற்ற மாணவர்களுடன் படித்த பாடத்தைப் பற்றிக் கலந்துரையாடுவதால், மற்றொரு கால்பகுதி மனதில் பதியும்; தான் படித்த பாடத்தை மற்றவர்களுக்கு விளக்குவதால், இன்னொரு அரைப்பகுதி முழுமையாகிப் பாடம் கற்ற பலன் கிடைக்கும்]

செந்தில் நாராயணன் : உங்கள் வினாக்கள் எனக்கு கற்பிக்கும் தன்மையில் உள்ளன.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : நன்றி ஐயா !

செந்தில் நாராயணன் : வாழ்த்துரைகள் என்று சொல்வதுதான் பொருத்தமானதாக இருக்கும் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது. வாழ்த்துக்கள் என்பது சரியா தவறா என்னும் ஐயத்துடன் உள்ளது. வாழ்த்துரைகள் என்பதில் எந்த குழப்பமும் இல்லை.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : மிக்க நன்றி ஐயா !

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : [1]திரு Giritharan Navaratnam அவர்கள் "வாழ்த்துப்பா" என்னும்போது வாழ்த்து என்பது பெயரடையாக வருகிறது என்று கூறுவது போல், "வாழ்த்துரை" என்னும் போது வாழ்த்து என்பது பெயரடையாக வருகிறதா ஐயா?

[2] வாழ்த்து என்ற சொல் வினைச்சொல் ஆகவும் இருந்து முதல்நிலைத் தொழிலாகுபெயராகவும் வந்து "வாழ்த்துப்பா"வில் பெயரடையாகவும் வரும் எனில்...... "வினை, பெயராகி, பெயரடையாகும் போது பன்மை வாரா" என்று வாழ்த்துக்கு இலக்கணம் எழுதலாமா ஐயா ?

[3]"திருவள்ளுவர் திருக்குறள் முதல் அதிகாரத்தில் கடவுள் வாழுத்து பாடினார்" என்று கூறும் போது வாழ்த்து வினையடையாக தானே வருகின்றது ? அப்படி எனில் ......... "வினை, பெயராகி, வினையடையாகும் போது பன்மை வாரா" என்று வாழ்த்துக்கு இலக்கணம் எழுதலாமா ஐயா ?

[4]பொதுவாக "வினை, பெயராகி, உரியாகும் போது பன்மை வாரா" என்று வாழ்த்துக்கு இலக்கணம் எழுதலாமா ஐயா ?

செந்தில் நாராயணன் :  [1] வாழ்த்துப்பா = வாழ்த்து + பா, ஓட்டப்பந்தயம் = ஓட்ட + பந்தயம் எனச் சொற்களை இரண்டாக பிரித்தல் ஒரு நிலை அவ்வாறு பிரிக்கும் போது முதலில் வரும் சொற்களைப் பெயரடைஆகத்தான் கொள்ள வேண்டிவரும்.

[2]ஆனால் அதே சொற்களை ஒருசொல் நீர்மைத்தாய பண்புத்தொகைச் சொற்களாகவும் கொள்ளலாம். ஏனெனில் அவை தமக்கென தனித்த பொருளைக் கொண்டிருக்கின்றன.

[3]உயரமான பையன் - உயரமான = பெயரடை, பையன் = பெயர்.

[4]ஆனால் வாழ்த்துப்பா, ஓட்டபந்தயம், பொங்கல் சோறு போன்ற சொற்களை உயரமான பையன் போன்ற தன்மையில் பிரித்துப் பார்க்க மனம் ஒப்பவில்லை.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :  மனிதர்களின் பண்புகளை தானே உரியாக நாலடியார் ஏற்கின்றார் ? வாழ்த்து ,ஓட்டம் , உயரம் யாவும் மனித பண்புகள் தானே ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : "திருவள்ளுவர் திருக்குறள் முதல் அதிகாரத்தில் கடவுள் வாழுத்து பாடினார்" என்று கூறும் போது வாழ்த்து இங்கு வினையடையாக தானே வருகின்றது ஐயா ?


செந்தில் நாராயணன் :  வாழ்த்து என்னும் வினையடியின் செய்து வாய்பாட்டு வினையெச்சம் வாழ்த்தி என்பதாக அமையும். ‘வாழ்த்திப் பேசினார் என்னும் போது வாழ்த்தி என்பதை மரபிலக்கணப் படி வினையெச்சமாகக் கொள்கிறோம். அதனை வினையடாகக் காட்டினாலும் தவறில்லை. அவர் தன் கவிதையை வாழ்த்தாகப் பாடினார் என்னும் தொடரில் வரும் வாழ்த்தாக (வாழ்த்து + ஆக - ஆக + வினையடை விகுதி ) என்பது வினையடை வடிவத்தில் உள்ளது. வாழ்த்தாக என்னும் வடிவம் வினையெச்சமாகக் கொள்ளப்படுவதில்லை.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : பண்புகளுக்கு பன்மை தகாத போது வாழ்த்துக்கு மட்டும் பன்மை தகுமா ஐயா ?

செந்தில் நாராயணன் :  நான் முன்னரே குறிப்பிட்டதற்கிணங்க வாழ்த்தைப் பன்மை ஆக்கியது ஆங்கிலமொழிச்சாயலில்தான். தமிழ்ச்சூழலுக்கு பன்மை வேண்டாத ஒன்றுதான். congratulations, greetings என்றெல்லாம் ஆங்கில மொழியில் காணும் வடிவங்களை நம்மவர்கள் அப்படியே மொழிபெயர்த்து பன்மையாக்கிவிட்டனர்.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : மிகவும் நன்றி ஐயா! கற்று அறிந்த தமிழ் அறிஞ்ர்கள் வாழ்த்தின் பன்மை விகுதிக்கு [க்கள்/கள்] விவாதம் செய்யும் போது ,நாம் வயதில் சிறியோர் வாழ்த்துக்கு பன்மை தகா என்று விவாதித்து முடிவு செய்து உள்ளது தான் நம் இளம் தமிழ் சிறப்பு ஐயா !

செந்தில் நாராயணன் :  உரிச்சொற்கள் வெறுமனே பெயரடை, வினையடை மட்டுமல்ல. பொருள் விளங்கிக்கொள்வதில் தடுமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் சொற்கள் என்று தொல்காப்பியருக்குத் தோன்றிய சொற்கள் அனைத்தும் உரிச்சொல்லாகத் தொல்காப்பியரலால் தேர்வுசெய்யப்பட்டுல்ளன.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : உரிச்சொல் என்பது வினைக்கு அல்லது பெயருக்கு முன் வந்து அவற்றின் பான்மையை/பண்பை/இயல்பை குறிக்கும் என்று நான் பொருள் கொண்டு உள்ளது சரி தானே ஐயா ?

செந்தில் நாராயணன் :   ‘மாதர் காதல்’ என்பதாக தொல்காப்பிய உரியியலில் ஒரு நூற்பா உள்ளது. இதில் குறிக்கப்பட்டுள்ள மாதர் என்பது பெண் என்னும் பொருளைத்தரும் இடங்களில் அது உரிச்ச்சொல்லாகக் கொள்ளப்படுவதில்லை. அது காதல் என்னும் பொருள் வரும்படி பயன்படுத்தபடும் இடங்களில்தான் அது உரிச்சொல்லாகக் கொள்ளபைகிறது. இங்கு மாதர் என்பது அதனுடைய அரிதான ஒரு பொருண்மை கருதியே தொல்காப்பியரால் உரிச்சொல்லாகக் கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற சொற்கள் வேறு சிலவும் தொல் உரியியலில் உள்ளன. எல்லா உரிச்சொற்களும் பெயரடையாகவோ வினையடையாகவோ இருப்பதில்லை.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :  "வினை, பெயராகி, உரியாகும்[ வினையடை,பெயரடை] போது பன்மை வாரா" என்று வாழ்த்துக்கு இலக்கணத்தை நம் அளவில் எழுதி பயன் படுத்துதல் சரி தானே ஐயா ?

செந்தில் நாராயணன் :  எனினும் மொழி என்பது சமூகத்தில் புழங்கும் பொருள். அதனை ஒருசிலர் மட்டுமே நின்று கட்டுப்படுத்த முடியாது. இக்காலத்தில் பலரும் பெரும்பான்மையும் வாழ்த்து என்பதுடன் பன்மை சேர்த்து எழுதியும் பேசியும் வரும் போது. பிற்காலத்தில் ஒருவர் தற்போதைய தமிழுக்கு இலக்கணம் எழுத முற்பட்டால் அவர், ‘வாழ்த்து’ என்னும் பனமையற்ற பொருண்மை 21 ஆம் நூற்றாண்டுத் தமிழில் பன்மை பெற்றுள்ளது எனப் பதிவு செய்வதத் தவிர வேறு வழியில்லை அவருக்கு. வேண்டுமெனில் அப்பதிவை அவர் புறனடையில் அமைத்துக்கொள்ளலாமே தவிர. அதனைப் பதிவு செய்யாமல் விடமுடியாது / விடக்கூடாது.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : எதிரில் தமிழ் மீது வரலாறு எழுதபடுவது ஒருபக்கம் இருப்பினும் நிகழில் தமிழ் கற்று அறிந்தவர்களே தவறு செய்யும் போது நாம் கலக்கம் செய்ய வேண்டாமா ஐயா ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :

நம் விவாத ஆய்வு முடிவு :

"வினை, பெயராகி, உரியாகும்[ வினையடை,பெயரடை] போது பன்மை வாரா"

என்று கொள்ளுதல் சரி தானே ஐயா ?

செந்தில் நாராயணன் :  வினையடை, பெயரைடை ஆகியவற்றில் பன்மை வாரா.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : வாழ்த்து என்ற வினைச்சொல் ,முதல்நிலைத் தொழிலாகுபெயராகி , வினையடை, பெயரைடை யாகவும் காட்சி அளிப்பதால்.....
"வினை, பெயராகி, உரியாகும்[ வினையடை,பெயரடை] போது பன்மை வாரா" என்று கொள்ளுதல் சரி தானே ஐயா ?

செந்தில் நாராயணன் : வேறு யாரேனும் தக்க விதத்தில் இக்கருத்தை மறுக்கும் வரை இதனை ஏற்றுக்கொள்வோம்.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : நாளை நம் தமிழரின் பழமையான இசை கருவியான "பறை" மீது விவாதம் செய்யலாமா ஐயா ? தமிழை ஆய்வதால் உறக்கம் வரவில்லையா ஐயா ?

செந்தில் நாராயணன் : நாளைய வகுப்பிறகான தயாரிப்பில் இருக்கிறேன். குழந்தை உறங்கச் சென்றபிந்தான் இந்த வேலையைப் பார்க்க முடிகிறது. பறை பற்றி அதிகம் படித்ததில்லை. புதிய தகவல்கள் இருந்தால் பகிரவும். நன்றியுடயவனாவேன்

 செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :  "பறை" பற்றி நாளை பேசுவோமா ஐயா ? மிக்க நன்றி ஐயா . மீண்டும் நாளை சிந்திப்போம்.

 தொடர்புடைய பதிவு :

  http://www.vansunsen.blogspot.in/2014/08/discussion-about-word-greet.html

Reference :
தமிழ் அறிக - 16
http://www.perumalmurugan.com/2014/05/16.html
அன்புடன்,
கி.செந்தில் குமரன்

Monday, August 4, 2014

"வாழ்த்து" என்ற சொல் பற்றி தமிழ்ப் பேராசிரியர் திரு செந்தில் நாராயணன் அவர்களுடன் ஒரு விவாதம் Discussion about the word Greet

தமிழ்ப் பேராசிரியர் திரு செந்தில் நாராயணன் அவர்களுடன் "வாழ்த்து" என்ற சொல் பற்றி ஒரு விவாதம் : 

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : "வாழ்த்து" என்ற சொல்லை உரிச்சொல்லாக கொள்ளலாமா ?

செந்தில் நாராயணன் :வாழ்த்து என்பதை முதல்நிலைத் தொழிலாகுபெயராகக் கொள்வதே பொருந்தும். வளை (bangle) போல

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :தொல்காப்பியர், (வழுத்தல்) = பரவு, பழிச்சு இதனை உரிச்சொல்லாக ஏற்கின்றார் அல்லவா ? வழுத்தல் என்பது வாழ்த்துதல் என்ற பொருள் படுமே !{பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள (தொல்காப்பியம் 2-8-85)}

செந்தில் நாராயணன் : ’பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள’ என்பதே நீங்கள் குறிப்பிடும் நூற்பா. தொல்காப்பிய உரியியலில் பொருள் விளக்கம் பெற்ற சொற்கள் உரிச்சொற்களே. பொருள் விளக்கம் செய்ய பயன்பட்ட சொற்கள் உரிச்சொற்களாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை அல்லவா?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : தொல்காப்பியர் "வழுத்தல்" என்ற சொல்லை உரிச்சொல்லாக தானே வகைமை படுத்தியுள்ளார் !

செந்தில் நாராயணன் : வழுத்தல் என்பது பரவு, பழிச்சு என்னும் உரிச்சொற்களை விளக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்ட சொல். (பயிலானதனவற்றைப் பயின்றவை சார்த்தி தொல் உரி. 1) அதாவது வழக்கில் அதிகம் பயிலாத சொற்களை வழக்கில் அதிகம் பயிலும் சொற்களைக் கொண்டு விளக்குதல். தந்தை என்றால் அப்பா என்பதற்கிணங்க.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :முதல்நிலைத் தொழிலாகுபெயருக்கு வேறு சில உதாரணம் கொடுங்கள் ஐயா

செந்தில் நாராயணன் : ’முறுக்கு’ (தின்பண்டம்), அச்சகத்தைக் குறிப்பிட ஆங்கிலத்தில் வழங்கப்படும் 'Press' என்பதும், அஞ்சலைக் குறிப்பிடும் ‘Post’ என்பதும் நாம் வழங்கும் முதல்நிலைத்தொழிலாகுபெயருக்கு இணையானவையே.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : ஐந்து முறுக்கை/முறுக்குகளை உண்டேன்.எது சரி ஐயா ?

செந்தில் நாராயணன் : ஐந்து என்பதைச் சேர்த்த பிறகு முறுக்குகள் என்னும் பன்மை தேவையில்லை. ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே என்றுதான் அமைந்துள்ளது சொல்லதிகார முதல் நூற்பா. ஆயிரு திணைகளில் இசைக்குமன என்று பன்மை சேர்க்கப்படவில்லை. தவிர தொல்காப்பியம் போன்ற இலக்கணநூல்கள் அவை எழுதப்பட்ட காலத்திய தமிழ் மொழியின் அமைப்பை விளக்குகின்றனவே ஒழிய இன்றைய தமிழுக்கு அவை எந்த விதிகளையும் கட்டாயப்படுத்தவில்லை. அது தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களின் பணியும் அன்று. தொல்காப்பிய இல்ககண உருவாக்க நெறிமுறைகளே இன்றைய தேவை.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :நண்பன் கொடுத்த முறுக்கை/முறுக்குகளை உண்டேன்.எது சரி ஐயா ?

செந்தில் நாராயணன் :நண்பன் கொடுத்தது ஒன்று எனில் முறுக்கு என்றும் நண்பன் கொடுத்தவை ஒன்றுக்கு மேல் எனில் முறுக்குகள் என்றும் வரும்.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :
"வாழ்த்து" முதல்நிலைத் தொழிலாகுபெயர் எனில்....
உன்னை "வாழத்தி பாடுகின்றேன்".
விருந்தினரை "வாழத்தி பேசினான்".
நண்பன் பொங்கல் "வாழ்த்து கூறினான்"
இவ் உதாரணங்களில் வாழத்தின் பயன்பாடு எந்த இலக்கண அடிப்படையில் உள்ளது ஐயா ? வினையுரிச்சொல்லா?[வினையடையா ?] அல்லது முதல்நிலைத் தொழிலாகுபெயரா?

செந்தில் நாராயணன் :
வாழ்த்தி = செய்து வாய்பாட்டு வினையெச்சம்
(செய்து காட்டினான், பாடிக் காட்டினான், ஓடிச் சென்றான் போல)

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : அந்த உதாரணங்களில் "வாழ்த்து" என்ற சொல்லை வினைச்சொல்லாக ஏற்க்க வேண்டும் அல்லவா ஐயா ?

செந்தில் நாராயணன் : வாழ்த்து என்பது அடிப்படையில் தொழில் பெயர், பாடு - பாட்டு, ஓடு - ஓட்டம், வீழ் - வீழ்ச்சி, செய் - செயல், பார்- பார்வை போல வாழ் - வாழ்த்து

செந்தில் நாராயணன் :வாழ் - வாழ்த்து என்பது தவறு. வாழ் என்பது வாழ்கிறேன் வாழ்வேன் என்ற வினைமுற்றுகளுக்கான வினையடி. வாழ்த்து என்பது வாழ்த்தினேன் வாழ்த்துகிறேன் என்பன போன்ற விணைமுற்றுகளுக்கான வினையடி. தவறாக பதிந்துவிட்டேன் மன்னிக்கவும். 

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : ஆம் ஐயா வாழ்தல் ,வாழ்த்துதல் இரண்டும் வேறு வேறு பொருள் தரும்

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : "வாழ்த்து" என்ற சொல்லை ஒருமுறை வினையெச்சமாகவும் வேறு மறு முறை முதல்நிலைத்தொழிலாகுபெயராகவும் குறிப்பிட்டு உள்ளீர்கள் ஐயா ? எதை நான் ஏற்பது ?

செந்தில் நாராயணன் : செய் = வினையடி, செய்தேன் = தன்மை ஒருமை இறந்தகால வினைமுற்று, செய, செய்து = வினையெச்சம், செய்த, செய்கின்ற, செய்யும் = பெயரெச்சம், செய்தவன் = வினையாலணையும் பெயர், செயல் = தொழில்பெயர். இவை போல ஒரு வினையடி மூவிடம் X மூன்றுகாலம் X ஒருமை பன்மை என 27 வகையான வினைமுற்றுக்களைப் பெற்றுவரும். தல் ,அல், கை, அம் போன்ற ஈறுகளைப் பெற்று தொழி பெயராக வரும் (எ - டு) ஓடுதல், செயல், ஆட்டம், வருகை. சில வேலைகளில் வினையடியே தொழில் பெயராக வழங்குவதும் உண்டு. வாழ்த்து, முறுக்கு போல. பெறு (வினையடி) - ‘பேறு’ முதல் நிலை நீண்ட தொழில் பெயர். நான் பெற்ற பேறு 

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : Sir really excellent narration of Our Tamil Grammar. My hate off. I wish u

செந்தில் நாராயணன் : வளை = ‘வளைத்தல்’ தல் விகுதி பெற்ற தொழில்பெயர். அதுவே வளை அணிந்த கைகள் என்ற இடத்தில் முதல் நிலையாகிய வினையடியே தொழில்பெயராகி அத்தொழிலால் உருவாக்கப்பட்ட அணிகலனைக் குறித்து வருவதால் இது முதன்நிலைத்தொழிலாகுபெயராகிறது. 

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : I understood sir

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : வாழ்த்து" என்ற சொல்லுடன் "க்கள்" அல்லது "கள்" பன்மை விகுதி இலக்கண படி ஏற்புடையதா ஐயா ?

செந்தில் நாராயணன் : writings = எழுத்துக்கள் (அவருடைய எழுத்துக்களை நான் படித்ததில்லை) என்பதைப்போல வாழ்த்தையும் ஆங்கில மொழிச்சாயலில் நாம் பன்மையாக்கிவிட்டோம். ஆனால் வாழ்த்துக்கள் என்று சொல்வதா அல்லது வாழ்த்துகள் என்று சொல்வதா என்பதில் எனக்குமே இன்னமும் தெளிவில்லை.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : வாழ்த்து என்பதை வினையடையாக நினைத்து இருந்தேன். அது வினையடி என்று எனக்கு மிக்க நன்றி ஐயா.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி :
//வாழ்த்தையும் ஆங்கில மொழிச்சாயலில் நாம் பன்மையாக்கிவிட்டோம். //
ஒருவர் உங்களுக்கு கூறும் "வாழ்த்து" என்பது எண்ணுவதற்கு [is it countable ?]ஏற்றதா ? இல்லையே ? அப்படி எனில் வாழ்த்துக்கள்[கள்] தவறு தானே ?

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : நன்னன் அவர்கள் வாழ்த்துகள் என்பதையும் பெமு அவர்கள் வாழ்த்துக்கள் என்பதையும் ஆதரிக்கின்றனர்.

செந்தில் நாராயணன் : தவறாக நினைக்க வேண்டாம். நாளை ஒப்படைக்கவேண்டிய பணி இன்னமும் முடிவடையவிலை. மீண்டும் நாளை தொடர்கிறேன். விடைகொடுங்கள்.

செந்தில்குமரன் கிருஷ்ணமுர்த்தி : முறுக்குகள் எண்ணபடலாம் . வாழ்த்துகளை எண்ண முடியுமா ஐயா ?
நன்றி ஐயா நாளை மீண்டும் சிந்திப்போம்!

தமிழ் உள்ளவரை இவ் விவாதம் தொடரும் ......

குறிப்பு :
எமக்கும் பேராசிரியருக்கும் தமிழ் என்ற பொது வெளியை தவிர வேறு எந்த உறவும் இல்லை. இரவு 12.30 அளவிலும் இவ் விவாதத்தில் எம்மை இணைப்பது தமிழ் ஆயின் இனி தமிழ் மெல்ல வளரும்.இவ் விவாதம் தமிழ் கூறும் நல்உலகுக்கு பயன்படும் எனினும் ,நாங்கள் இருவரும் பெருமை பட்டு கொள்ள தமிழராய் பிறந்தோம் என்பதை தவிர ஏதும் ஏதும் இல்லை. நன்றி. ஐயா செந்தில் நாராயணன் எம் விவாத முறைபடுத்துதளில் [Editing ] தவறு இருப்பின் எம்மை மன்னித்து தவறை பழுது நீக்கம் செய்யவும்.

Reference :
தமிழ் அறிக - 16
http://www.perumalmurugan.com/2014/05/16.html

அன்புடன்,
கி.செந்தில் குமரன்

Saturday, August 2, 2014

both are wrong? வாழ்த்துகள்? அல்லது வாழ்த்துக்கள்?